பஸ்சுக்கு காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி மாயம்


பஸ்சுக்கு காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி மாயம்
x
தினத்தந்தி 6 Aug 2021 8:57 PM GMT (Updated: 6 Aug 2021 8:57 PM GMT)

பஸ்சுக்கு காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி மாயமானார்.

பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, ஆலத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். டிரைவர். இவரது மனைவி பத்மா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான பத்மா தற்போது ஆலத்தூர் தெற்கு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி பத்மாவை, அவரது தாய் கோவிந்தம்மாள் பரிசோதனைக்காக பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். பின்னர் பரிசோதனை முடிந்து மாலையில் ஊருக்கு செல்வதற்காக அவர்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பத்மாவின் செல்போனை காணவில்லை. இதனால் செல்போனை கோவிந்தம்மாள் தேடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பத்மாவையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள், பத்மாவை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாணை நடத்தி பத்மாவை தேடி வருகின்றனர். காணாமல் போன நிறைமாத கர்ப்பிணி பத்மாவுக்கு நேற்று முன்தினம் தான் பிரசவ தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story