மெட்ரோ ரெயிலில் வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி கல்லூரி விரிவுரையாளர் கைது


மெட்ரோ ரெயிலில் வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி கல்லூரி விரிவுரையாளர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 5:59 AM GMT (Updated: 7 Aug 2021 5:59 AM GMT)

மெட்ரோ ரெயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த கல்லூரி விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர்பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 33). இவர், சென்னை மெட்ரோ ரெயிலில் வேலைக்காக முயற்சி செய்துவந்தார். இதை அறிந்த சென்னை கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வரும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த கிருபா (42) என்பவர் மெட்ரோ ரெயில் உயர் அதிகாரிகளை எனக்கு நன்கு தெரியும். அவர்கள் மூலமாக சென்னை மெட்ரோ ரெயிலில் மேற்பார்வையாளர் வேலை வாங்கித் தருவதாக சந்திரசேகரிடம் ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதற்காக சந்திரசேகரிடம் இருந்து ரூ.21 லட்சம் வாங்கிய கிருபா, சொன்னபடி அவருக்கு வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் தலைமறைவாகி விட்டார்.

இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடம் சந்திரசேகர் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை அருகே பதுங்கி இருந்த கல்லூரி விரிவுரையாளர் கிருபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story