சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 6:51 PM GMT (Updated: 7 Aug 2021 7:01 PM GMT)

சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கருமத்தம்பட்டி,

கோவை சூலூரை அடுத்துள்ள காடாம்பாடி, காங்கேயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி வழிகாட்டுதலின் பேரில், கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தனிப்படையினர் அப்பநாயக்கன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரிவால்வர் முருகன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பதும், சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஊரடங்கின்போது,  டாஸ்மார்க் கடையில் துளையிட்டு பணம் மற்றும் மதுபான பாட்டில்கள் திருடிய வழக்கில் முருகன் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

 இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 18 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story