மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 7 Aug 2021 9:34 PM GMT (Updated: 7 Aug 2021 9:34 PM GMT)

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

உடையார்பாளையம்:

கொத்தனார்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை காலனி தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் ஜெயபால்(வயது 35). கொத்தனார். 
அதே ஊரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் கருப்பையன்(35). பிட்டர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மதியம் நாச்சியார்பேட்டை கிராமத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஆதிச்சனூர் கிராமத்தில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றனர்.
ஜெயபால் மோட்டார் சைக்கிளை ஓட்ட பின்னால் கருப்பையன் அமர்ந்திருந்தார். நாச்சியார்பேட்டை- ஆதிச்சனூர் இடையே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாவு
கருப்பையன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருப்பையன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story