கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை கணவர் உள்பட 5 பேர் கைது


கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை கணவர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2021 4:58 PM GMT (Updated: 8 Aug 2021 4:58 PM GMT)

மத்தூர் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்:
மத்தூர் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள புளியாண்டப்பட்டி காலனியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25). வேன் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த அனிதா (23) என்பவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அனிதா போச்சம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த அனிதாவை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் அனிதா அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அனிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
5 பேர் கைது
இதற்கிடையே ஹரிஹரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனிதாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அனிதாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனிதா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.இளம்பெண் தற்கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். இதற்கிடையே புதுப்பெண் அனிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹரிஹரன், அவரது மாமனார் மாதப்பன், மாமியார் கலைவாணி, உறவினர்கள் சக்திவேல், திம்மராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story