வீடுகளில் பதுக்கப்பட்ட 572 கிலோ புகையிலை பொருட்கள்- ரூ.1½ லட்சம் பறிமுதல்


வீடுகளில் பதுக்கப்பட்ட 572 கிலோ புகையிலை பொருட்கள்-  ரூ.1½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Aug 2021 8:38 PM GMT (Updated: 9 Aug 2021 8:38 PM GMT)

வீடுகளில் பதுக்கப்பட்ட 572 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவர் அரியலூரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொடுத்த போது, அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வெளி மாவட்டத்தில் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கி பொய்யாதநல்லூரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அரியலூர் போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 500 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், குபேந்திரன் மற்றும் பரூக் ஆகியோரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என பாப்பாங்குளம் கிராமத்தில் ஒரு வீட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாப்பாங்குளம் கிராமத்தில் சபி என்பவரது வீட்டில் சுமார் 72 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து, அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story