சாலை தடுப்பில் மோதிய சரக்கு ஆட்டோ பாலத்தில் இருந்து பாய்ந்தது; 10 பேர் படுகாயம்


சாலை தடுப்பில் மோதிய சரக்கு ஆட்டோ பாலத்தில் இருந்து பாய்ந்தது; 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Aug 2021 5:48 PM GMT (Updated: 10 Aug 2021 5:54 PM GMT)

சாலை தடுப்பில் மோதிய சரக்கு ஆட்டோ பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்தது, இதில் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

அருப்புக்கோட்டை, 
சாலை தடுப்பில் மோதிய சரக்கு ஆட்டோ பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்தது, இதில் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
கூலி தொழிலாளர்கள் 
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிக்கு சென்று லாரிகளில் வாழைத்தார்கள் ஏற்றி அனுப்பிவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அதனை ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஓட்டிவந்தார்.
நேற்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சரக்கு ஆட்டோ வந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி, அருகே உள்ள குறுகிய பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்தது.
10 பேர் படுகாயம் 
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கன்னிராஜ், வடிவேல், முத்துகிருஷ்ணன், லிங்கதுரை, கணேசன், முத்துராஜ், திவாகர், பிரகாஷ்ராஜ், மலையாண்டி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
 விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் மற்றும் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story