2 வீடுகளில் நகை - பணம் கொள்ளை


2 வீடுகளில் நகை - பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Aug 2021 7:59 PM GMT (Updated: 11 Aug 2021 7:59 PM GMT)

ராஜபாளையத்தில் 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் மேல் தளத்தில் வாடகைக்கும், வீட்டின் உரிமையாளர் ஆனந்த் கீழ் தளத்திலும் வசித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் ஆனந்த் மதுரையில் பணியாற்றி வருவதால் வாரம் ஒரு முறை வந்து செல்வார் என கூறப்படுகிறது.  இந்தநிலையில் நேற்று சசிக்குமார் வேலைக்கு புறப்பட்டு சென்றவுடன், அவரது மனைவி சாந்தி தனது மகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். பிற்பகலில் வீடு திரும்பிய சாந்தி, கீழ் வீட்டின் கதவு திறந்திருந்ததை பார்த்துள்ளார். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. எனவே சந்தேகத்துடன் மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது தனது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து சசிக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். 
சசிக்குமார் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. 
அதேபோல ஆனந்த் வீட்டில் உள்ள ரூ.12 ஆயிரமும் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சசிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story