ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை திறந்து விடக்கோரி தஞ்சையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை திறந்து விடக்கோரி தஞ்சையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:16 PM GMT (Updated: 12 Aug 2021 1:16 PM GMT)

ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளை திறந்து விடக்கோரி தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் பகுதியில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் குருசாமி, மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாலதி, சங்க மாவட்ட பொருளாளர் சிவப்பிரியா, மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கிலிமுத்து, ரவி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜன், கிருஷ்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளை மூடி வைக்காமல் மீண்டும் திறந்து விட வேண்டும். நடைமேடைக் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தியதை கைவிட வேண்டும். மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகளை ரெயில் நிலையங்களில் மீண்டும் இயக்க வேண்டும்.

பாண்டிச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில், மாற்றுத்திறனாளி வாகனத்திற்கு பெட்ரோல், டீசல் மானியம் வழங்குவதைப் போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் பிரபாகர், ஒன்றியத் தலைவர் கஸ்தூரி, தஞ்சை நகர தலைவர் மோகன், திருவையாறு சந்தோஷ், பூதலூர் தெற்கு செந்தில்குமார் மற்றும் தஞ்சை நகரம், தஞ்சை ஒன்றியம், அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, பூதலூர் தெற்கு, பூதலூர் வடக்கு, திருவையாறு ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story