சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 12 Aug 2021 5:13 PM GMT (Updated: 12 Aug 2021 5:13 PM GMT)

ஒத்திகை

விழுப்புரம், 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரத்தில் உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுதந்திர தின விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகளை நேரில் வரவழைத்து கவுரவிக்காமல் அவர்களது வீட்டிற்கே சென்று கவுரவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை குறைந்த எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளை கொண்டு எளிமையான முறையில் நடத்தவும், குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை கொண்டு அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் மைதானத்தில் நேற்று மாலை காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஒத்திகையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபா, பிரகாசம், துரை, பாலமுருகன் மற்றும் போலீசார் கலந்துகொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Next Story