ஊராட்சி மன்றத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு


ஊராட்சி மன்றத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Aug 2021 9:42 AM GMT (Updated: 17 Aug 2021 9:42 AM GMT)

ஊராட்சி மன்றத் தேர்தலில் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட சாமந்தவாடா ஊராட்சியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவரது மனைவி தனலட்சுமி (50). இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்ற போது, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக தனலட்சுமி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த லதா ரமேஷ் என்பவர் போட்டியிட்டார். இதில் லதா ரமேஷ் 260 வாக்குகளும், தனலட்சுமி மோகன் 256 வாக்குகளும் பெற்றனர். 4 வாக்குகள் வித்தியாசத்தில் லதா ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் தனலட்சுமியின் கணவர் மோகன் பலமுறை புகார் அளித்ததாக தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இருப்பினும் இது நாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அவர் இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த எந்த ஒரு முயற்சியையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மோகன் நேற்று தன் மனைவி தனலட்சுமி உடன் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது, மாவட்ட கலெக்டரின் கார் முன்பு நின்ற அவர், தான் பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனடியாக ஓடிவந்து தடுத்து அவரை தடுத்து நிறுத்தினர்.

போலீசார் விசாரணை

இச்சம்பவத்தை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். மேலும் அவரை விசாரணைக்காக திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து போலீசார் அவரிடமும், அவரது மனைவியிடமும் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன் வந்து கணவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story