32 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


32 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 19 Aug 2021 7:56 PM GMT (Updated: 19 Aug 2021 7:56 PM GMT)

சிவகாசி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 டன் ரேஷன் அரிசியை சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் பறிமுதல் செய்தார்.

சிவகாசி, 
சிவகாசி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 டன் ரேஷன் அரிசியை சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் பறிமுதல் செய்தார். 
குடோன்
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம்-விளாம்பட்டி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருப்பது இல்லை.
 இரவு நேரங்களில் மட்டும் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாகவும், வாகனங்கள் வந்து செல்வதாகவும் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் நேற்று காலை தாசிதார் ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டி ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்றார்.
சந்தேகம்
அப்போது அங்கு ஒரு கட்டிடத்தின் முன்பு சரக்கு வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தின் முன்புற கண்ணாடியில் அத்தியாவசிய பொருட்கள் அவசரம் என்று ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த வாகனத்தின் மீது ஏறி பார்த்தபோது அதில் அரிசி மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
பின்னர் அதன் அருகில் இருந்த குடோனின் பூட்டை உடைத்து பார்த்த போது அதில் ரேஷன் அரிசி மூடைகள் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குடோனில் அரிசி பாலிஷ் செய்ய தேவையான எந்திரம் மற்றும் சாக்குபைகள் ஆகியவை இருந்தது. மொத்தம் 32,600 கிலோ ரேஷன் அரிசியும், 150 கிலோ கோதுமையும் இருந்தது.
சீல்
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து வாங்கப்பட்ட ரேஷன் அரிசிகள் இங்கு கொண்டு வரப்பட்டு பாலீஷ் செய்யப்பட்டு வெளியூர்களுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
 இந்த குடோனின் உரிமையாளர் யார்? ரேஷன் அரிசி மூடைகளை கொண்டு வந்து பதுக்கி வைத்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைக்க சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் தாசில்தார் ராஜ்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு சரக்கு வாகனத்தையும், இருச்சக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story