பழமை வாய்ந்த டச்சுக்கோட்டையில் கலெக்டர் ஆய்வு


பழமை வாய்ந்த டச்சுக்கோட்டையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Aug 2021 1:47 PM GMT (Updated: 20 Aug 2021 1:47 PM GMT)

கல்பாக்கம் அருகே தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ள டச்சுக்கோட்டை என்ற 400 ஆண்டு பழமை வாய்ந்த கோட்டையை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ளது சதுரங்கப்பட்டினம் கிராமம். இங்கு தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ள டச்சுக்கோட்டை என்ற 400 ஆண்டு பழமை வாய்ந்த கோட்டை உள்ளது. வங்காள விரிகுடா கடற்கரையில் 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் துணி, நறுமண பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான நோக்கத்தில் இந்த கோட்டை கட்டப்பட்டது. 

செங்கற்களால் ஆன பெரிய மதிற்சுவர்கள் உள்ள இந்த கோட்டையின் உள்புறம் குதிரை லாயம், சேமிப்பு கிடங்கு, அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கல்லறைகள், சுரங்கப்பாதைகள் உள்ளன. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் இங்கு வருகை தருவர்.

இந்த கோட்டையை சுற்றுலா தலமாக்கும் நோக்கத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார். அவருடன் திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மண்டல துணை தாசில்தார் கார்த்திக் ரகுநாத், வருவாய் ஆய்வாளர் நிர்மலா, கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்களும் வந்தனர். 

6 ஏக்கர் 85 சென்ட் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலாபயணிகளுக்கு வசதியாக இங்கு பூங்கா அமைத்தல், குடிநீர், மின்சாரம், கழிவறை, மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கோட்டையை சீரமைக்க கலெக்டர் ராகுல்நாத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story