விவசாயி கல்லால் அடித்துக்கொலை


விவசாயி கல்லால் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2021 7:49 PM GMT (Updated: 20 Aug 2021 7:49 PM GMT)

அம்பை அருகே நிலத்தகராறில் விவசாயி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

அம்பை:
அம்பை அருகே நிலத்தகராறில் விவசாயி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

விவசாயி

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா மணிமுத்தாறு அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் தோப்பு தெருவை சேர்ந்தவா் பேச்சி மகன் துரைப்பாண்டி (வயது 48), விவசாயி.

இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான சிவசங்கர பெருமாள் என்ற பேச்சி (60) குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற கோவில் கொடை விழாவின்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அடித்துக்கொலை

நேற்று காலை துரைப்பாண்டி, அவரது வயலின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசங்கரபெருமாள் மற்றும் அவரது மகன் சட்டநாதன் (35) உள்ளிட்ட சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசங்கரபெருமாள் என்ற பேச்சி, அவரது மகன் சட்டநாதன் மற்றும் சிலர் சேர்ந்து துரைப்பாண்டியை அருகில் இருந்த கல்லால் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தை-மகன் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த பயங்கர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிவசங்கரபெருமாள், அவருடைய மகன் சட்டநாதன் ஆகியோரை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

விவசாயி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story