இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Aug 2021 7:41 PM GMT (Updated: 26 Aug 2021 7:41 PM GMT)

இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடையார்பாளையம்:

இலவச பட்டா வழங்க...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச பட்டா வழங்க, அதே கிராமத்தில் சிலருக்கு சொந்தமான மொத்தம் 3 ஏக்கர் இடத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள், 3 ஏக்கர் இடத்தை அளவீடு செய்ய நேற்று வந்துள்ளனர்.
சாலை மறியல்
அப்போது இடத்ைத அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி அதிகாரிகளை கண்டித்தும் இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது நீதிமன்ற வழக்கு முடியும் வரை இடத்தை அளவீடு செய்யக்கூடாது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கால அவகாசம் கொடுத்து, அலுவலர்கள் சென்றனர். இந்த சம்பவத்தால் அரியலூர்- தா.பழூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story