மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2021 5:31 PM GMT (Updated: 27 Aug 2021 5:31 PM GMT)

உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி:
உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரியம்மாள், செயலாளர் சுரேஷ்குமார், துணை செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் வழங்கும் உதவி தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 4 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். புதுச்சேரி, மிசோரம் மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் வெண்ணிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
வைத்தீஸ்வரன்கோவில்
இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையம் அருகில் உதவி் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன், நகர தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தீஸ்வரன்கோவில், கற்கோவில், புங்கனூர், திருப்புங்கூர், கன்னியாகுடி, எட குடி வடபாதி, காரைமேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Next Story