கல்லல் பகுதியில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள்


கல்லல் பகுதியில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 27 Aug 2021 6:15 PM GMT (Updated: 27 Aug 2021 6:16 PM GMT)

ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் கல்லல் பகுதியில் கரும்பு பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.

கல்லல்,

ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் கல்லல் பகுதியில் கரும்பு பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
கரும்பு பயிர்கள்

தமிழர்களின் திருநாளாக கொண்டாடப்பட்டு வரும் தை பொங்கல் திருவிழாவில் முக்கியமாக கருதப்படுவது கரும்பு. அன்றைய தினம் அனைத்து வீடுகளிலும் பொங்கல் விழா பூஜையின் போது கரும்பு முக்கிய இடம் வகிக்கும். இத்தகைய கரும்பு பயிர்களை சிவகங்கையை அடுத்த கல்லல் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டு முறையாக பராமரித்து வருகின்றனர். கல்லல் அருகே உள்ள ஆழவிளாம்பட்டி, செம்பனூர், மதகுபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது விவசாயிகள் தங்களது வயல்களில் கரும்பு பயிர்களை பயிரிட்டுள்ளனர். 

இதுகுறித்து ஆழவிளாம்பட்டி கிராம விவசாயி கூறும்போது, பொதுவாக நெல் பயிர் பயிரிட்டு அதன் அறுவடைக்கு பின்னர் ஆண்டுதோறும் வரும் பொங்கல் விழாவிற்காக வயல்களில் கரும்பு பயிர் பயிரிடுவது வழக்கம். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக போதிய அளவு கரும்பு பயிர்கள் பயிடப்படவில்லை. ஆனால் இந்தாண்டு மழை பெய்து கண்மாய்கள் நிரம்பி இருந்தால் போதுமான ஈரப்பதம் மண்ணிக்கு கிடைத்துள்ளது.

இயற்கை உரங்கள் இதை பயன்படுத்தி தற்போது கடந்த 4 மாதங்களுக்கு முன்பே இந்த கரும்பு பயிர்கள் பயிரிட்டு பராமரித்து வருகிறேன். இது 8 மாதத்தில் வளர்ந்து விடும். வரும் ஜனவரி மாதம் தொடக்கத்தில் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராகும். இந்த கரும்பு பயிர்களுக்கு எவ்வித ரசாயன உரங்களை பயன்படுத்தவில்லை. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருத்துகளை பயன்படுத்தினால் அவை நல்ல விளைச்சலை கொடுக்காது. மேலும் நல்ல இனிப்புடன் கூடிய கரும்பு வராது. எனவே இயற்கை உரங்களான மாடு மற்றும் ஆட்டு சாணம் உள்ளிட்டகளை மற்றும் பயன்படுத்தி வருகிறேன். 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் தற்போது வளர்ந்து வரும் இந்த கரும்பின் தோகைகள் காற்றினால் முறிந்து போகமல் இருப்பதற்காக அவற்றை சிறிய கயிறு மூலம் கட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் அறுவடைக்கு கரும்பு தயாராகி விடும். அப்போது சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு நேரடியாக வந்து கரும்பை வாங்கிச் செல்வார்கள் என்றார்.

Next Story