தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை


தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 27 Aug 2021 8:39 PM GMT (Updated: 27 Aug 2021 8:39 PM GMT)

குலசேகரம் அருகே மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தாயுடன் என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.

குலசேகரம்:
குலசேகரம் அருகே மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தாயுடன் என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சோகம்
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு அலெக்சாண்டர்புரத்தை சேர்ந்தவர் நாகம்மாள். இவரது மகன்கள் ராஜன், சுரேஷ் (வயது 43). சுரேஷ் கூலி வேலை செய்து வந்தார். ராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 
இந்தநிலையில் நாகம்மாள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டார். மறுநாள் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் நாகம்மாளை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் திடீரென இறந்தார்.   
தாயார் இறந்ததை தொடர்ந்து சுரேஷ் மிகவும் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக தினமும் அதிகமாக மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
அண்ணியுடன் தகராறு
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த சுரேஷ் தனது அண்ணனான ராஜன் வீட்டுக்கு சென்றார். ராஜன் வெளிநாட்டில் உள்ள நிலையில் வீட்டில் அவரது மனைவி விஜிலாவும் (42), மகன் ஆர்லின் ரிஷோவும் இருந்தனர். பின்னர் அங்கிருந்த தனது அண்ணியிடம், "எனது  அம்மாவை சரியாக கவனிக்கவில்லை" என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 
 இதனால் பிரச்சினை விபரீதமாகிவிடும் என்று நினைத்த விஜிலா, அங்கிருந்து சென்று விடுமாறு சுரேசிடம் கூறினார். ஆனால், அதை காதில் வாங்கிக்கொள்ளாத சுரேஷ் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதற்கிடையே திடீரென்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், தாயும் மகனும் சேர்ந்து சுரேஷ் மீது வெந்நீரை எடுத்து ஊற்றி உள்ளனர். அப்படியாவது அவர் அங்கிருந்து சென்று விடுவார் என்று நினைத்தனர். இதனால் கடும் கோபம் அடைந்த சுரேஷ் அவர்கள் இருவரையும் தாக்க முயன்றார்.
கத்தியால் குத்தினார்
அப்போது திடீரென்று கோபம் அடைந்த ஆர்லின் ரிஷோ வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சித்தப்பா சுரேசை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே கீழே சரிந்து விழுந்தார். 
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த சுரேசை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
தாய்-மகன் கைது
இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்லின் ரிஷோவையும், அவரது தாயார் விஜிலாவையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்லின் ரிஷோ கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இறந்த சுரேசுக்கு மரியா எமில்டா (37) என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
மது போதையில் தகராறு செய்த சித்தப்பாவை, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story