கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக  அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 2:37 PM GMT (Updated: 28 Aug 2021 2:37 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்:
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கனமழை
கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான வயநாடு, குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 
ஆர்ப்பரித்து கொட்டியது
அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 
இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க மடம் சோதனைச்சாவடியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story