பலாத்கார வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் சிக்கியது எப்படி?; பரபரப்பு தகவல்கள்


பலாத்கார வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் சிக்கியது எப்படி?; பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 28 Aug 2021 7:59 PM GMT (Updated: 28 Aug 2021 7:59 PM GMT)

மைசூரு கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மைசூரு: மைசூரு கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பரபரப்பு தகவல்கள்

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதியில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் பலாத்கார வழக்கில் 5 பேரும் போலீசில் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பஸ் டிக்கெட்

கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 5 பேரும் தமிழ்நாட்டில் இருந்து மைசூரு பண்டிபாளையா மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றி வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும், லலிதாதிரிபுரா பகுதியில் மதுபான கடையில் மது வாங்கி விட்டு, சாமுண்டி மலை அடிவாரத்தில் வைத்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கல்லூரி மாணவி தனது காதலனுடன் அங்கு வந்துள்ளார். 

இதனால், அவர்கள் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவ்வாறு அவர் தப்பி செல்லும்போது பஸ் டிக்கெட் ஒன்றை தவறவிட்டுள்ளனர். அது தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் தமிழ்நாடு அரசு பஸ்சில் பயணம் செய்த டிக்கெட் ஆகும்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இந்த கூட்டு பலாத்கார வழக்கு விசாரணையில் போலீசாருக்கு அந்த பஸ் டிக்கெட் தான் முக்கிய துருப்புசீட்டாக அமைந்தது. அந்த டிக்கெட்டை முக்கிய துப்பாக வைத்து தான் போலீசார் குற்றவாளிகளை பிடித்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்தன. இதனால் லலிதாதிரிபுராவில் உள்ள மதுக்கடையில் தான் அவர்கள் மதுபானம் வாங்கி இருக்க வேண்டும் என போலீசார் கருதினர். 

இதனால் லலிதாதிரிபுராவில் உள்ள மதுபானக்கடையில் கடந்த 24-ந்தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானம் வாங்கியவர்கள் யார்-யார் என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஆய்வு செய்தபோது அதில் பதிவான செல்போன் எண்ணும், சாம்ராஜ்நகரில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்ணும் ஒன்றாக இருந்தது. 

அதாவது, போலீசாருக்கு துப்பாக கிடைத்த டிக்கெட் மூலம் மர்மநபர்கள் தாளவாடியில் இருந்து சாம்ராஜ்நகருக்கு பயணித்தது தெரியவந்தது. இதனால் சாம்ராஜ்நகரில் உள்ள செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்யும்போது இது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தான் அவர்கள் 5 பேரும் போலீசில் கிக்கி உள்ளனர்.

உறுதிப்படுத்தினர்

அதில் சந்தேகப்படும்படியாக 6 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த 6 பேரின் புகைப்படங்களை போலீசார், கற்பழிப்புக்குள்ளான மாணவி மற்றும் அவரது காதலனிடம் காட்டினர். அப்போது அவர்கள் 6 பேரும் தான் தங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணம் என அவர்கள் போலீசாரிடம்  கூறினர்.
அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க களமிறங்கிய போலீசார் 5 பேரையும் தமிழ்நாட்டுக்கு பறந்து சென்று பிடித்து கைது செய்துள்ளனர்.  

Next Story