அரிவாளால் வெட்டி பெண் கொலை; கணவருக்கு போலீஸ் வலைவீச்சு


அரிவாளால் வெட்டி பெண் கொலை; கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Aug 2021 9:07 PM GMT (Updated: 28 Aug 2021 9:07 PM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு: நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

நடத்தையில் சந்தேகம்

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா முள்ளூர் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட போரேகவுடனகொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் லவகுமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பங்கஜ். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளாள். 

லவகுமார் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த மனைவியுடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த லவகுமார், தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அப்போதும் மனைவியின் நடத்தையில் சந்கேப்பட்டு அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். 

குடிபோதையில் இருந்த லவகுமார், ஆத்திரம் தீராமால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவி பங்கஜை சரமாரியாக வெட்டினாா்.  இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பங்கஜ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த லவகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பிளிகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான பங்கஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை லவகுமார் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து லவகுமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story