காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக் கொலை; நண்பர் கைது


காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக் கொலை; நண்பர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 9:08 PM GMT (Updated: 28 Aug 2021 9:08 PM GMT)

பாகல்கோட்டை அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகல்கோட்டை: பாகல்கோட்டை அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் கொலை

பாகல்கோட்டை மாவட்டம் இலகல் தாலுகா அமின்காத் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கடூரு கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தா (வயது 28). இவர், கூலி வேலைக்கு சென்று வந்தார். அனுமந்தாவுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. நேற்று முனதினம் இரவு நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி அனுமந்தா வெளியே புறப்பட்டு சென்றார். ஆனால் நள்ளிரவு வரை அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில், நேற்று காலையில் கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் அனுமந்தா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அமின்காத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அனுமந்தாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

காதல் விவகாரத்தில்...

அப்போது அனுமந்தாவை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் நேற்று முன்தினம் இரவு அவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து மதுஅருந்த சென்றிருந்தார். அவர் தான் அனுமந்தாவை குத்திக் கொன்றது தெரியவந்தது. அதாவது நண்பரின் தங்கையை அனுமந்தா காதலித்ததாக தெரிகிறது. அந்த இளம்பெண்ணுக்கு பின்னால் சுற்றி அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த அனுமந்தாவின் நண்பர், தனது சகோதரியை காதலிப்பதையும், அவருக்கு தொல்லை கொடுப்பதையும் விட்டு விடும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதன் காரணமாக நேற்று முன்தினம் அனுமந்தாவுக்கு மதுபானம் வாங்கி கொடுத்து, அவரை நண்பர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமின்காத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமந்தாவின் நண்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story