கொலை குற்றவாளிகள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை குற்றவாளிகள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 29 Aug 2021 1:32 PM GMT (Updated: 29 Aug 2021 1:32 PM GMT)

கொலை குற்றவாளிகள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்த வியாபாரி மணிகண்டன் (வயது 41) கடந்த 7-ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி (39), சத்தியமூர்த்தி (29), அன்பழகன் (22) உள்பட 12 பேரை திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். இவர்களில் சுந்தரபாண்டி, சத்தியமூர்த்தி, அன்பழகன் ஆகியோர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் முத்துக்குமார் நகரை சேர்ந்த உத்தராஜா என்பவரின் வீட்டில் கடந்த மே மாதம் 9-ந்தேதி 26 பவுன் நகை, ரூ.50 லட்சம் ஆகியவை கொள்ளை போனது. இதுதொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் (37), திருப்பாச்சேத்தியை சேர்ந்த அஜித்குமார் (23) ஆகியோரை ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். மேற்கண்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சுந்தரபாண்டி உள்பட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



Next Story