ராவத்தநல்லூரில் பரபரப்பு ஆஞ்சநேயர் கோவிலை திறக்கக்கோரி பட்டாச்சாரியார்களிடம் பக்தர்கள் வாக்குவாதம்


ராவத்தநல்லூரில் பரபரப்பு ஆஞ்சநேயர் கோவிலை திறக்கக்கோரி பட்டாச்சாரியார்களிடம் பக்தர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 29 Aug 2021 5:38 PM GMT (Updated: 29 Aug 2021 5:38 PM GMT)

ராவத்தநல்லூரில் ஆஞ்சநேயர் கோவிவிலை திறக்கக்கோரி பட்டாச்சாரியார்களிடம் பக்தர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மூங்கில்துறைப்பட்டு

ஆஞ்சநேயர் கோவில்

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூரில் புகழ் பெற்ற ஸ்ரீ சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக வந்து செல்கிறார்கள்.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 வாரங்களாக அரசு அறிவித்த கட்டுப்பாட்டின் படி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவிலை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. 

வாக்குவாதம்

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக காலை நேரங்களில் மட்டும் பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்றும் சாமி தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் ஆத்திரம் அடைந்த சிலர் கோவிலை திறக்கக்கோரி பட்டாச்சாரியார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, இ்ந்த கோவிலை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைதான் விஷேசநாள் ஆகும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் கோவிலை திறக்க தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட 3 நாட்களை தவிர மற்ற நாட்களிலும் கோவில் நடை திறக்கப்படுவதில்லை. இதனால் சாமி தரிசனத்துக்காக வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

பரபரப்பு

இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இருப்பதால் அதன் படிதான் செயல்பட முடியும் என்று கூறி அவர்களை சமாதானம் செய்தனர். 
கோவில் நடையை திறக்கக்கோரி பட்டாச்சாரியார்களிடம் பக்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ராவத்தநல்லூரில் பரபரப்பு ஏற்பட்டது.











Next Story