கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்


கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
x
தினத்தந்தி 30 Aug 2021 8:23 PM GMT (Updated: 30 Aug 2021 8:23 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி

நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பண்டிகை காலம் வந்தாலே கொண்டாட்டம்தான் அதுவும் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே கேட்கவே வேண்டாம் அன்றைய தினம் ஹீரோக்கள் வீட்டில் உள்ள சுட்டிக்குழந்தைகள் தான்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று பெரும்பாலான இல்லங்களில் குழந்தைகளை கண்ணனைப் போல அழகாய் அலங்கரித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் வீட்டுப்பிள்ளைகளை கிருஷ்ணனைப் போலவும் ராதையை போலவும் அலங்கரித்து கண்ணன் பிறப்பை கொண்டாடினர்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்களில் பெரிய அளவில் கொண்டாடப்பட விட்டாலும் அனைவரின் வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா களை கட்டியது.குழந்தைகளுக்கு சுட்டிகண்ணன் மற்றும் ராதை வேடமிட்டும், ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கண்ணன் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்தும், வண்ண வண்ண கோலமிட்டும், பால், தயிர், வெண்ணை, பழ வகைகளைப் படைத்தும் கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

விருதுநகர்

விருதுநகரிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். அதே போல் பலர் தங்கள் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடினார்கள்.
தளவாய்புரம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து பக்தர்களின் பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமியை வழிபட்டனர்..இதற்கான ஏற்பாடுகளை யாதவ சமுதாய மக்கள் செய்திருந்தனர். தேவதானம் நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் நேற்று கோகுலாஷ்டமி தினத்தையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.

Next Story