பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை; காதலன் வெறிச்செயல்


பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை; காதலன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 30 Aug 2021 9:21 PM GMT (Updated: 30 Aug 2021 9:21 PM GMT)

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். திருமணத்திற்கு மறுத்ததால் தீர்த்து கட்டிய காதலன் கைது செய்யப்பட்டுளளார்.

பெங்களூரு:

காதல்

  பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபெலே பகுதியில் வசித்து வந்தவர் அனிதா (வயது 23). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் (27) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால், அனிதாவுக்கும், வெங்கடேசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

  மேலும் தொட்டபெலேயில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் அனிதா தனது தோழியுடனும், அதே வீட்டின் 2-வது மாடியில் தனது நண்பருடன் வெங்கடேசும் தங்கிஇருந்துள்ளனர். வெங்கடேசை காதலிப்பது பற்றி தனது பெற்றோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிதா கூறியுள்ளார். ஆனால் அனிதாவை, வெங்கடேசுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்து விட்டனர். அத்துடன் அனிதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தார்கள்.

கழுத்தை அறுத்து கொலை

  இதுபற்றி வெங்கடேசிடம் அனிதா தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால், வேறு ஒரு பெண்ணை பார்த்துதிருமணம் செய்து கொள்ளும்படி வெங்கடேசிடம் அனிதா கூறியுள்ளார். இந்தவிவகாரம் தொடர்பாக அனிதாவுக்கும், வெங்கடேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பை மீறி வெங்கடேசை திருமணம் செய்ய அனிதா மறுத்து வந்துள்ளார்.

  இதன் காரணமாக ஆத்திரமடைந்த வெங்கடேஷ், நேற்று காலையில் வீட்டில் இருந்து அனிதா வேலைக்கு புறப்பட்டு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் தொட்டபெலே மெயின் ரோட்டில் வைத்து அனிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு வெங்கடேஷ் ஓடிவிட்டார். இதில், கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிதா பரிதாபமாக இறந்து விட்டார்.

புதிய கத்தி வாங்கினார்

  இதுபற்றி தகவல் அறிந்ததும் கெங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கும், தனியார் மருத்துவமனைக்கும் விரைந்து சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீலும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
  
அப்போது அனிதாவும், வெங்கடேசும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் வெங்கடேசை திருமணம் செய்ய அனிதா மறுத்ததால், அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அனிதாவை கொலை செய்ய ரூ.80-க்கு புதிதாக கத்தி ஒன்றை வெங்கடேஷ் வாங்கியதாகவும், அதனை பயன்படுத்தி தான் அனிதாவை கொலை செய்திருப்பதாகவும் துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் தெரிவித்துள்ளார்.

காதலன் கைது

  இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த வெங்கடேசை கெங்கேரி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடுரோட்டில் வைத்து நடந்த இந்த கொலை சம்பவம் கெங்கேரியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story