பள்ளிபாளையத்தில் பச்சை நிறத்தில் வினியோகிக்கப்பட்ட குடிநீர்-சாயப்பட்டறை கழிவு நீர் கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு


பள்ளிபாளையத்தில் பச்சை நிறத்தில் வினியோகிக்கப்பட்ட குடிநீர்-சாயப்பட்டறை கழிவு நீர் கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 Aug 2021 7:23 PM GMT (Updated: 31 Aug 2021 7:23 PM GMT)

பள்ளிபாளையத்தில் பச்சை நிறத்தில் குடிநீர் வினியோகிக்கப்பட்டதால், அதில் சாய பட்டறை கழிவு நீர் கலந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

பள்ளிபாளையம்:
பச்சை நிறத்தில் குடிநீர்
பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதேபோல் சாயப்பட்டறைகளும் அதிகளவில் உள்ளன. இதில் சில சாயப்பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி வருவதாக புகார்கள் உள்ளன. 
இந்தநிலையில் நேற்று பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அதில் பழனியப்பாநகர், கண்டிபுதூர், ராஜவீதி, முஸ்லிம் தெரு, சின்ன வீதி, முருகன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் பச்சை நிறத்தில் வந்தது. மேலும் துர்நாற்றமும் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
வாந்தி, காய்ச்சல்
பள்ளிபாளையத்தில் உள்ள சாயப்பட்டறைகள் சிலவற்றில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது. சில சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் நிறம் மாறி வருகிறது. மேலும் எங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரும் பச்சை நிறத்தில், துர்நாற்றத்துடன் உள்ளது. இதனை குடிக்கும் போது குழந்தைகள் வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே எங்கள் பகுதியில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும். மேலும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story