30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வசிப்போருக்கு குடியுரிமை


30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வசிப்போருக்கு குடியுரிமை
x
தினத்தந்தி 31 Aug 2021 9:09 PM GMT (Updated: 31 Aug 2021 9:09 PM GMT)

30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வசிப்போருக்கு குடியுரிமை

திருச்சி, செப்.1-
இலங்கை தமிழர்களின் கல்வி, அடிப்படை வசதிகளுக்காக ரூ.317 கோடி நிதி ஒதுக்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், அதேநேரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமில் வசித்து வரும் எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள்
இலங்கையில் இனப்போர் மூண்டதையடுத்து அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு இங்குள்ள அரசுகள் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, கல்வி உரிமை மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் தங்கி வசித்து வருகிறார்கள்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபிறகும், பலர் சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல் இங்கேயே இருக்க நினைக்கிறார்கள். அவ்வாறு தமிழகம் முழுவதும் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ், புதிய வீடுகள் கட்டித்தரப்படும், பழுதடைந்த வீடுகள் சீரமைக்கப்படும், கல்வி உதவித்தொகை, கியாஸ் அடுப்பு உள்பட பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்தார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் நலனுக்காக ரூ.317 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். அதேபோல் இலங்கை அகதிகள் முகாமை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்றழைக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புகளுக்கு இலங்கை தமிழர்கள் மனமார நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் சிலர் கூறியதாவது:-
சித்ராதேவி:-திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இங்கு எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கருணாநிதி தான் எங்களுக்கு பண உதவித்தொகை வழங்கினார். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்களுக்கு வீடு, குடிநீர்வசதி, கல்வி உதவித்தொகை என பல்வேறு சலுகைகளை அறிவித்து மனதை குளிர வைத்துவிட்டார். இங்கு 3 தலைமுறைகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் இதுவரை தி.மு.க. ஆட்சியில் எங்களுக்கு கிடைத்து வரும் உதவிகளை போல் எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை.
எங்கள் வீடுகளில் எல்லாம் தி்.மு.க. ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இலவச டி.வி. தான் இன்னமும் இருக்கிறது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சமூகத்தில் எங்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவது சிறப்பு. என்றென்றும் இலங்கை அகதிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. அதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சுதந்திரமாக வாழவேண்டும்
மயூரி:-கடந்த 1990-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் இருந்து இங்கு வந்து வசித்து வருகிறோம். எங்களை அகதிகள் என்று காலமெல்லாம் கூறி வந்தனர். இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசாணை வெளியிடப்படும் என கூறி உள்ளார். இது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கும் இங்குள்ள அனைத்து மக்களையும் போல் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஆசை உள்ளது.
குடியுரிமை வழங்கினால் எங்களாலும் எல்லோரையும் போல் வாழ முடியும். கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் தான் எங்களுக்கு வழங்கிய மாத உதவித்தொகையை ரூ.400-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கினார்கள். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் உயர்த்தி வழங்கி இருக்கிறார்கள். நிச்சயமாக மு.க.ஸ்டாலின் கூறியதுபோல் இலங்கை அகதிகளுக்கு துணையாக உள்ள அரசாக தான் இந்த அரசு உள்ளது.
குடியுரிமை வழங்கப்படுமா?
பரமேஸ்வரி:-அகதிகள் முகாமில் வசிக்கும் நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. குடியுரிமை இல்லாததால் எங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவில்லை. எனது கணவர் கனடாவில் வசித்து வருகிறார். அவரை சென்று பார்க்க முடியாமல் தவித்து வருகிறேன். குடியுரிமை வழங்கினால் பாஸ்போர்ட் கிடைக்கும். வெளிநாட்டுக்கு சென்று எனது கணவரை பார்க்க முடியும்.  மேலும், அகதிகள் முகாமில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கி இருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. காவிரி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ததற்காகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்த முதல்-அமைச்சர், இன்னும் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
அரசு வேலைக்கு செல்ல முடியாது
சாந்தி:-முகாமில் வசிப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை அடையாள அட்டையை முகாம் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும்போது, திடீரென திரும்ப முடியாத காரணத்தால் அடையாள அட்டையை காண்பிக்க முடியாமல் போகிறது. தொடர்ச்சியாக அடையாள அட்டை காண்பிக்க முடியாவிட்டால் மீண்டும் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. பதிவு இல்லாவிட்டால் வீடு மற்றும் இதர சலுகைகள் எதுவும் கிடைக்காது. ஆகவே பல்வேறு காரணங்களுக்காக பதிவை இழந்த அனைவரையும் பதிவில் சேர்க்க வேண்டும். மேலும், எங்கள் பிள்ளைகள் எவ்வளவு தான் நன்றாக படித்தாலும் அரசு வேலைக்கு செல்ல முடியாது. ஏதாவது தனியார் அலுவலகங்கள் அல்லது கடைகளில் தான் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
முகாம் வாசிகளின் பிள்ளைகளும் அரசு வேலைக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கஷ்டங்களை எல்லாம் புரிந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இதுவரை கியாஸ் அடுப்பு நாங்கள் பயன்படுத்தியது இல்லை. தற்போது கியாஸ் அடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இன்னும் சில கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றினால் நாங்கள் வாழ்நாள் முழுவதும் முதல்-அமைச்சரை மறக்க மாட்டோம்.
அரசு சலுகைகளால் ஓரளவு நிம்மதி
திவ்யா:-தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இலங்கை தமிழர்களாகிய எங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து எங்களது துயர் துடைக்க முயற்சி எடுத்து விட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இத்தனை ஆண்டுகளாக கஷ்டங்களை அனுபவித்து வந்த எங்களுக்கு அரசு அறிவித்த சலுகைகள் மூலம் தற்போது ஓரளவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. மாத உதவித்தொகை உயர்த்தி வழங்குவதால் இங்குள்ள எத்தனையோ குடும்பங்கள் பிழைக்கும்.
அதேநேரம் ஆண்களுக்கு தனியாக உதவித்தொகையும், பெண்களுக்கு தனியாக உதவித்தொகையும் வழங்குகிறார்கள். இந்த தொகையை கணவன்மார்கள் சிலர் எடுத்துகொண்டு தேவையற்ற செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். இதனால் குடும்பத்தை நடத்த சிரமமாக இருக்கிறது. ஆகவே உதவித்தொகை முழுவதும் குடும்பத்தலைவிக்கே கிடைக்கும்படி செய்தால் மதுப்பழக்கம் உள்ளிட்டவற்றில் இருந்து ஆண்களை மீட்கலாம்.
மகிழ்ச்சி
கருப்பையா:-நான் திருச்சி வாழவந்தான்கோட்டை முகாமில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கொட்டப்பட்டு முகாமிற்கு வந்தேன். இங்குள்ள சிலர் முகாமில் இருந்து பெயிண்டிங், கட்டிட வேலை, ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் வேலை உள்பட பல்வேறு வேலைகளுக்கு சென்று தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை சம்பாதிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் வேலை இருக்காது. ஒரு மாதத்தில் 10 நாட்கள் அல்லது 15 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்.
தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு மீண்டும் இலங்கைக்கு செல்வதற்கு விருப்பமில்லை. இங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். திருச்சி கொட்டப்பட்டு முகாமில் சுமார் 1250 பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டிலேயே வசிக்க வேண்டும் என்றும், அதனால் இந்திய குடியுரிமை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளனர். அவர்களது எண்ணம் நிறைவேறுமா?

Next Story