ஆத்தூர் அருகே பைத்தூரில் பொதுமக்கள் சாலைமறியல்


ஆத்தூர் அருகே பைத்தூரில் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 31 Aug 2021 11:06 PM GMT (Updated: 31 Aug 2021 11:06 PM GMT)

ஆத்தூர் அருகே பைத்தூரில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி 7-வது வார்டு நைனார்பாளையம் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக இந்த திட்டத்தில் தங்கள் பகுதியினருக்கு முறையாக வேலை வழங்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திடீரென பைத்தூர்-ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளரிடம் பேசி முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story