சின்னசேலம் அருகே மக்காச்சோள பயிருக்கு தெளித்த களைக்கொல்லி மருந்தால் 7 ஏக்கர் பருத்தி சேதம்


சின்னசேலம் அருகே  மக்காச்சோள பயிருக்கு தெளித்த களைக்கொல்லி மருந்தால் 7 ஏக்கர் பருத்தி சேதம்
x
தினத்தந்தி 1 Sep 2021 4:30 PM GMT (Updated: 1 Sep 2021 4:30 PM GMT)

சின்னசேலம் அருகே மக்காச்சோள பயிருக்கு தெளித்த களைக்கொல்லி மருந்தால் 7 ஏக்கர் பருத்தி சேதம் போலீசார் விசாரணை


சின்னசேலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டாரத்திற்குட்பட்ட அனுமனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் ராமர்(வயது 52) விவசாயி. இவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தில் புல் அதிகளவில் வளர்ந்திருப்பதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள கடையில் ராமர் களைக்கொல்லி மருந்து வாங்கி தெளித்துள்ளார். பின்னர் இந்த மருந்தின் தாக்கம் காற்றின் மூலம் அருகிலுள்ள சுமார் 7 ஏக்கர் பருத்தி மீதும் பரவியது. இதில் பருத்தி இலைகள் சுருண்டு முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் சேதத்திற்கு இழப்பீடு கேட்டும், சம்பந்தப்பட்ட மருந்து கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், பயிர் சாகுபடி முறை, மருந்து தெளிப்பு பற்றி விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாத வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகளின் அலட்சியம்தான் பயிர் சேதத்துக்கு காரணம் என கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  அதன் பேரில் மக்காச்சோள பயிருக்கு தெளித்த களைக்கொல்லி மருந்தின் தாக்கம் காரணமாக பருத்தி பயிர்கள் சேதம் அடைந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story