ஆள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது


ஆள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Sep 2021 8:30 PM GMT (Updated: 1 Sep 2021 8:30 PM GMT)

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஆள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொத்தடிமைகளாக கடத்தப்பட்ட 7 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

திருச்சி, செப்.2-
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஆள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொத்தடிமைகளாக கடத்தப்பட்ட 7 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
தீவிர கண்காணிப்பு
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தல், மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் தங்க நகைகள் கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த குழுவினர் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் தினமும் நடைமேடைகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இருப்புப்பாதை போலீசாரும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதன்படி நேற்று முன்தினம் ரெயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த வாசுதேவன், வீரக்குமார், கலைச்செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சத்தீஷ்கார் மாநிலம் பனாரசில் இருந்து ராமேசுவரத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் பிற்பகல் 3.15 மணிக்கு வந்தடைந்தது.
கொத்தடிமை சிறுவர்கள்
அப்போது ரெயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளை ரெயில்வே பாதுகாப்பு படை குழுவினர் மற்றும் சைல்டு லைன் குழுவினர் கண்காணித்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல், 7 சிறுவர்களை ரெயிலில் இருந்து இறங்கி அழைத்து சென்றனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமாநிலமான உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலத்தில் இருந்து 13 வயது முதல் 16 வயதுடைய சிறுவர்கள் 20 பேரை, கட்டிட வேலைக்காக கொத்தடிமைகளாக கடத்தி வருவது தெரியவந்தது. அவர்களில் 13 சிறுவர்கள் கட்டிட வேலைக்காக வேறுபெட்டியில் பயணித்து இறங்கி சென்று விட்டதும் கண்டறியப்பட்டது.
3 கடத்தல்காரர்கள் கைது
அதைத்தொடர்ந்து 7 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மேலும் சிறுவர்களை கடத்த உடந்தையாக இருந்த ஏஜென்டுகளான ஆள் கடத்தல்காரர்களான உத்தரப்பிரதேச மாநிலம் சன்பாட்ரா என்ற இடத்தைச் சேர்ந்த ரமேஷ், சன்பாட்சடுடியை சேர்ந்த ஷிவ்புஜன் மற்றும் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த கிர்வார்லால் சவுகான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மூவர் மீதும் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் வழக்குப்பதிவு செய்தார்.
கொத்தடிமைகளாக கடத்தி வரப்பட்ட சிறுவர்கள், திருச்சி மொராய் சிட்டி, முசிறி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் கட்டிட வேலைக்காக அழைத்து வருவதாக கடத்தல்காரர்களும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எஞ்சிய 13 சிறுவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
குழந்தைகள் திட்ட அதிகாரி விசாரணை
முன்னதாக மீட்கப்பட்ட 7 சிறுவர்கள் மற்றும் கைதான கடத்தல்காரர்கள் 3 பேரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களிடம் குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி விசாரணை மேற்கொண்டார். அவரிடமும், கட்டுமான தொழிலுக்காக சிறுவர்களை கடத்தி வந்ததாக கைதான 3 பேரும் ஒப்புக்கொண்டனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சிறுவர்களை கடத்தி வந்ததாக 3 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story