ரெயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் ஒளிரும் வண்ண மின்விளக்குகள்


ரெயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் ஒளிரும் வண்ண மின்விளக்குகள்
x
தினத்தந்தி 1 Sep 2021 9:03 PM GMT (Updated: 1 Sep 2021 9:03 PM GMT)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி பகுதியில் 3 இடங்களில் ஒளிரும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

தஞ்சாவூர்;
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி பகுதியில் 3 இடங்களில் ஒளிரும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. முதல் கட்டமாக தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பார்த்து வியப்படைந்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
தஞ்சை நகராட்சி கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தஞ்சை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.1,289 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றன.
இந்த திட்டத்தின் கீழ் பாரம்பரியமான தஞ்சை நகரை மேலும் அழகுபடுத்தும் வகையில், கோட்டை அகழி மேம்பாடு, குளங்கள் மறுசீரமைப்பு, குடிநீர் அபிவிருத்தி, புதை சாக்கடை சீரமைப்புப் பணிகள், காமராஜர் மார்க்கெட் சீரமைப்பு, சரபோஜி மார்க்கெட் சீரமைப்பு, மணிக்கூண்டு சீரமைப்பு, பழைய பஸ் நிலையம் புதுப்பித்தல், பூங்காக்கள் சீரமைப்பு, நகரங்களின் சாலைகள் புதுப்பித்தல், நகர்ப்புறங்களில் தெருக்கள் மேம்பாடு என 90 திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில், 16 திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
டைனமிக் எல்.இடி. விளக்குகள்
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை மேரீஸ்கார்னர் - சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை இரவு நேரங்களில் ஒளிரும் வண்ண மின் விளக்குகளால் ஒளிர செய்ய டைனமிக் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், பாலம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மின்னொளியில் அழகுடன் மிளிரத் தொடங்கியுள்ளது.
தற்போது சோதனை முயற்சியாக மின்விளக்கு எரிய விடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வண்ண விளக்குகளால் பாலம் பகுதி மேலும் அழகுடன் மிளரத்தொடங்கி உள்ளது. இந்த மின்விளக்குகள் எரிவதைப் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
100 மீட்டர் நீளம்
இது குறித்து, தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரை அழகுபடுத்தும் பணிகளில் ஒன்றாக தஞ்சாவூர் மேரீஸ்கார்னர்  சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு பாலத்தின் அடிப்பகுதியில் டைனமிக் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது சோதனை முயற்சியாக மின் விளக்குகள் எரியத் தொடங்கி உள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இதனால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்கப்படும். சென்னையில் 16 இடங்களில் இதுபோன்று டைனமிக் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், தஞ்சையில் மூன்று இடங்களில் ரூ.2 கோடி செலவில் டைனமிக் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன.
மாநகராட்சி அலுவலகம்-அய்யங்குளம்
தற்போது முதல் கட்டமாக பாலத்தில் பணிகள் நடைபெற்றது. அடுத்தபடியாக தஞ்சை மாநகராட்சி அலுவலகம் மற்றும் அய்யங்குளம் பகுதியில் இந்த டைனமிக் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பணிகள்தொடங்கப்பட உள்ளது. என்றனர்.

Next Story