சோளிங்கர் நகராட்சியுடன் பாண்டியநல்லூர், சோமசமுத்திரம் ஊராட்சிகளை இணைப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்


சோளிங்கர் நகராட்சியுடன் பாண்டியநல்லூர், சோமசமுத்திரம் ஊராட்சிகளை இணைப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 2 Sep 2021 4:51 PM GMT (Updated: 2 Sep 2021 4:51 PM GMT)

சோளிங்கர் நகராட்சியுடன் பாண்டியநல்லூர், சோமசமுத்திரம் ஊராட்சிகளை இணைப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சியுடன் பாண்டியநல்லூர், சோமசமுத்திரம் ஊராட்சிகளை இணைப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

கருத்து கேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தேர்வு நிலை பேரூராட்சியுடன் பாண்டியநல்லூர், சோமசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளை இணைத்து சோளிங்கர் நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

 சோளிங்கருடன் சோமசமுத்திரம் ஊராட்சியை இணைக்கக்கூடாது என அந்த ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் கொண்டபாளையம் தக்கான்குளம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சோளிங்கர் தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

கூடுதல் மருத்துவர்கள்

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் சுதாகர் பங்கேற்று பேசுகையில், சோளிங்கர் நகராட்சிக்கு வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் விரைவில் அறிவிக்க வேண்டும், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனையில் துறை சார்ந்த பிரிவுகள் தொடங்கப்பட்டு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், என்றார்.

விவசாயிகளை காக்க வேண்டும்

மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் உதயகுமார், பேசுகையில், சோளிங்கரில் நகராட்சியில் இணைக்க உள்ள பாண்டியநல்லூர், சோமசுந்தரம் ஆகிய ஊராட்சிகளில் சிறு விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் பலர் உள்ளனர். 

அவர்கள் தினமும் வேலை செய்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியும். அவர்கள் தங்களின் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு போதுமான வருமானமின்றி சிரமப்படுகிறார்கள். அந்த ஊராட்சிகள் நகராட்சியில் இணைக்கப்பட்டால் நகராட்சி நிர்வாகம் விதிக்கும் வரியை செலுத்த சிரமப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். விவசாயிகளை காக்க வேண்டும், என்றார்.

போதிய வருமானம் கிடைக்கவில்லை

மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சோளிங்கர் பேரூராட்சியில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இருக்கிற பெரிய வார்டுகளை பிரித்து புதிய வார்டுகளாக உருவாக்கி கொள்ளலாம். சோமசமுத்திரம், பண்டியநல்லூர் ஊரட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. நகராட்சி விதிக்கும் வரியை கூட அவர்களால் செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லை. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக விற்கப்படும் நிலை ஏற்படும், என்றார். 

கூட்டத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் இளங்கோவன், சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, துப்புரவு ஆய்வாளர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கோபால், மாவட்ட தி.மு.க. அவை தலைவர் அசோகன், நகர தி.மு.க. செயலாளர் கோபி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், திமு.க. ஒன்றிய செயலாளர் நாகராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயன், அ.தி.மு.க. நகர செயலாளர் ராமு உள்பட பல்ேவறு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story