அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் லாரியை விவசாயிகள் சிறைபிடிப்பு


அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் லாரியை விவசாயிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 2 Sep 2021 5:06 PM GMT (Updated: 2 Sep 2021 5:06 PM GMT)

4 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு பில் போடாததால் கலவை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கலவை

4 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு பில் போடாததால் கலவை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல் கொள்முதல் நிலையம்

கலவையை அடுத்த தோனிமேடு கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை இங்கு விற்பனை செய்து வந்தனர் இவற்றுக்கு கடந்த 4 மாதங்களாக பில் போடவில்லை.

இதனிடையே அங்கு பெய்த மழையால் 5,100 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டது. 1,100 நெல் மூட்டைகள் மட்டும் பில் போடப்பட்டிருந்தது. மீதம் உள்ள 4 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு பில் போடப்படவி்ல்லை.

லாரி சிறைபிடிப்பு

இந்த நிலையில் பில் போடப்பட்ட 1,100 நெல் மூட்டைகளை இன்று காலை பணியாளர்கள் ஏற்றிக்கொண்டிரு்தனர். 

அப்போது அருகே இருந்த விவசாயிகள் இங்கு உள்ள 4 ஆயிரம் நெல் மூட்டைகளை பில் போட்டு பணம் கொடுத்துவிட்டு இந்த மூட்டைகளை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி லாரியை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த கலவை தாசில்தார் ஷாமிம், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, மண்டல மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் 

அப்போது விவசாயிகளிடம், ‘‘உங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் நேரில் சென்று கலந்து பேசி நிறைவேற்றி தருகிறோம்’’ என்று கூறினர்.

 இதனையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story