சேந்தமங்கலத்தில் டீக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சேந்தமங்கலத்தில் டீக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து  19 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Sep 2021 6:12 PM GMT (Updated: 2 Sep 2021 6:12 PM GMT)

சேந்தமங்கலத்தில் டீக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேந்தமங்கலம்:
டீக்கடைக்காரர்
சேந்தமங்கலம் பேரூராட்சி மேட்டு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் பெரிய தேர்நிலையம் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேகருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக சேந்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து சேகர் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சேகர் குடும்பத்தினருடன் ஆஸ்பத்திரிக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிந்தது. மேலும் அவருடைய வீட்டின் அருகே உள்ள 2 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் வீட்டில் நகைகள், பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். சேந்தமங்கலத்தில் டீக்கடைக்காரர் வீட்டில் 19 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருடப்பட்ட சம்பவமும், பக்கத்து வீடுகளில் திருட்டு முயற்சி நடந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story