குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி


குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 3 Sep 2021 12:50 AM GMT (Updated: 3 Sep 2021 12:50 AM GMT)

பிதிர்காடு அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

பந்தலூர்

பிதிர்காடு அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே பதினெட்டுகுன்னு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பிதிர்காட்டில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் இருந்து பதினெட்டுகுன்னு கிராமத்துக்கு சிமெண்டு சாலை செல்கிறது.

இந்த சாலை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பந்தலூர் தாலுகாவில் மழை பெய்து வருகிறது.  இதனால் அந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பதினெட்டுகுன்னு கிராம மக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் இருந்து பிதிர்காடு செல்லும் சாலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் சாலை உடைந்து மோசமான நிலையில் உள்ளது. அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் கூட விரைவாக வந்து செல்ல முடிவது இல்லை.

காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. அவை துரத்தினால் விரைவாக தப்பி ஓட முடிவது இல்லை. குண்டும், குழியுமான அந்த சாலையில் தவறி விழுந்து காயம் அடையும் நிலை நீடிக்கிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story