பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Sep 2021 4:45 PM GMT (Updated: 3 Sep 2021 4:46 PM GMT)

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க  மாநில பொருளாளர் செட்டியப்பன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சக்ரவர்த்தி கலந்து கொண்டு பேசினார். 
இந்த போராட்டத்தில் வட்ட தலைவர் கிருஷ்ணன், வட்ட செயலாளர் திம்மன், மாவட்ட செயலாளர் கரூரான் மற்றும் சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

சாலை மறியல்

அப்போது அதிகாரிகள் அழைத்து பேசாததால் மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

போராட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். முழு சம்பளம் வழங்க வேண்டும். 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலிலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story