நிதி நிறுவன ஊழியர் கைது


நிதி நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 3 Sep 2021 5:06 PM GMT (Updated: 3 Sep 2021 5:06 PM GMT)

இளம் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கொடுத்த புகாரின் பேரில் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்

வாய்மேடு:
இளம் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கொடுத்த புகாரின் பேரில் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவன ஊழியர்
நாகை மாவட்டம் மூங்கில்குடி வடுகச்சேரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 20). திருமணமான இவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 
இந்த நிதி நிறுவனத்தில் ஆய்மூர் மேலக்காடு பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இவர் கடன் தவணை தொகையை சரிவர கட்டவில்லை என தெரிகிறது. 
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்
இதனால் கடன் தவணை தொகையை வசூல் செய்ய நேற்று முன்தினம் மாலையில் மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீடு பூட்டிக்கிடந்துள்ளது. இதனால் மணிகண்டன் அந்த பெண்ணுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
அந்த பெண் செல்போனை எடுக்காததால் அவரின் 19 வயது மகளின் செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். பின்னர் அங்கிருந்து மணிகண்டன் சென்று விட்டார். இந்த நிலையில் அந்த பெண் தனது மகளுக்கு மணிகண்டன் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தலைஞாயிறு போலீசில் புகார் செய்தார். 
கைது
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story