பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை: நாமக்கல்லில் விநாயகர் சிலை விற்பனை சரிவு


பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை: நாமக்கல்லில் விநாயகர் சிலை விற்பனை சரிவு
x
தினத்தந்தி 3 Sep 2021 6:06 PM GMT (Updated: 3 Sep 2021 6:06 PM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளதால், நாமக்கல்லில் விநாயகர் சிலை விற்பனை சரிவடைந்துள்ளது.

நாமக்கல்:
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, கோவில்களின் வெளிப்புறத்திலும், சுற்றுப்புறத்திலும் வைத்துவிட்டு செல்லவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
விற்பனை சரிந்தது
இதனிடையே விநாயகர் சதுர்த்தியின்போது விற்பனை செய்வதற்காக நாமக்கல்லில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு நடைபெறுவது வழக்கம். கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க 2-வது ஆண்டாக அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் நலிவடைந்து உள்ளது. முந்தைய காலங்களில் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன.
தற்போது உள்ள கட்டுப்பாடு காரணமாக 4 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் மட்டுமே விற்பனைக்காக தயாரிக்கப்பட்டு உள்ளன. இதனால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளின் தயாரிப்பும், விற்பனையும் கடுமையாக சரிந்தது. அதனால் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து நாமக்கல் அருகே உள்ள போதுப்பட்டி, சக்தி நகரில் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-
கொரோனா காலத்திற்கு முன்புவரை 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். ஆண்டுக்கு சுமார் 500 சிலைகளுக்கு மேல் விற்பனையாகும். ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாட தடை விதித்து உள்ளது.
வீடுகளில் மட்டும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதித்துள்ளது. இதனால் அரசு வழிகாட்டுதல்படி களிமண் மற்றும் பேப்பர் கூழ் மூலம் ½ அடி முதல் 4 அடி வரை விநாயகர் சிலைகளை விற்பனைக்காக தயாரித்து வைத்து உள்ளோம். அந்த சிலைகளுக்கு வாட்டர் கலர் மூலம் வண்ணங்கள் பூசப்பட்டு உள்ளது. மயில் விநாயகர், நந்தி விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர் உள்பட 15 வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ரூ.50 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் விற்பனை கடுமையாக குறைந்து உள்ளது. இதனால் சிலைகள் குடோன்களில் தேக்கமடைதுள்ளன. இதன் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story