தாசில்தார் மீது தாக்குதல்


தாசில்தார் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 3 Sep 2021 8:09 PM GMT (Updated: 3 Sep 2021 8:09 PM GMT)

மணப்பாறையில் தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணப்பாறை, செப்.4-
மணப்பாறையில் தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தாசில்தாரை தாக்கியதை கண்டித்து தாலுகா அலுவலக ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் மீது தாக்குதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர நிலவரி திட்ட அலுவலகம் உள்ளது. இங்கு தனி தாசில்தாராக பாத்திமா சகாயராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை எடத்தெரு பகுதியை சேர்ந்த தி.மு.க. நகர பொருளாளர் கோபி என்பவர் நிலவரி திட்ட அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, பணியில் இருந்த தாசில்தார் பாத்திமா சகாயராஜியிடம்  சர்வே எண் ஒன்றை கொடுத்து அது யார் பெயரில் உள்ளது என்று கேட்டதாக தெரிகிறது.  இதற்கு தாசில்தார் பதில் அளித்துள்ளார். மேலும் மற்றொரு சர்வே எண் தொடர்பாக கேட்டபோது அதற்கு உரிய ஆவணத்தை தாசில்தார் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகி்றது. இதில் காயம் அடைந்ததாக கூறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ், கோபி ஆகியோர் மணப்பாறைஅரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
வழக்குப்பதிவு
இதையடுத்து கோபி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒருதனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் நிலஅளவை ஆய்வாளர் குணசேகரன் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் கோபி மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பால்வண்ணன் தலைமையில், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா, இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று கோபியிடம் விசாரணை நடத்தினர். அவர் சிகிச்சையில் இருந்ததால் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது.
ஊழியர்கள் போராட்டம்
இதற்கிடையில் பணியில் இருந்த தனி தாசில்தாரை அலுவலகத்துக்குள் வந்து தாக்கிய தி.மு.க. பிரமுகரை கண்டித்து ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பூட்டி விட்டு அங்கு நின்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் பணிக்கு செல்லாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியிலும் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story