மதுராந்தகம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்


மதுராந்தகம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 3 Sep 2021 11:04 PM GMT (Updated: 3 Sep 2021 11:04 PM GMT)

மதுராந்தகம் அருகே நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அருணாகுளத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் வெங்கடேசன் வயது (29). இவர் கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த டோரா கார்த்திக் என்பவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் அவர், அவரது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவு 2 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து கத்தி மற்றும் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை நடராஜ் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனிடம் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வலைவீச்சு

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து வெங்கடேசனை வெட்டிக்கொன்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை டோரா கார்த்திக் கொலைக்கு பழிக்கு பழியாக முன்விரோதத்தில் நடந்ததா? அல்லது வெங்கடேசன் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்து வந்ததால், தொழில் போட்டி காரணமாக நடந்ததா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story