மூங்கில்துறைப்பட்டு அருகே பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையத்தில் பாடம் பயிலும் குழந்தைகள்


மூங்கில்துறைப்பட்டு அருகே பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையத்தில் பாடம் பயிலும் குழந்தைகள்
x
தினத்தந்தி 4 Sep 2021 4:42 PM GMT (Updated: 4 Sep 2021 4:42 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையத்தில் பாடம் பயிலும் குழந்தைகள் சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வடபொன்பரப்பி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அங்கன்வாடி மையம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டது. 
இதன் பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் அங்கன்வாடி மைய கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்து காணப்படுகிறது. 

மேற்கூரையில் போடப்பட்ட ஓடுகள் உடைந்து காணப்படுகிறது. சில பகுதிகளில் ஓடுகள் இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து குளம்போல தேங்கி விடுகிறது. வெயில்காலங்களில் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளிக்கதிர்  உள்ளே இருக்கும் குழந்தைகளின் மீது விழுகிறது.  தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து கீழே விழுந்து வருகின்றன. குழந்தைகள் இந்த கட்டிடத்தில்தான் மதிய உணவை அருந்துகிறார்கள். 

இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அங்கன் வாடி மைய கட்டிடத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னதாக சேதம் அடைந்த அங்கன் வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story