ரோந்து காவலர்களுக்கு சிறந்த தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு


ரோந்து காவலர்களுக்கு சிறந்த தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 4 Sep 2021 6:23 PM GMT (Updated: 4 Sep 2021 6:23 PM GMT)

ரோந்து காவலர்களுக்கும் சிறந்த தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கும் மாதாந்திர கூட்ட ஆய்வுக் கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கூறினார்.

ஆற்காடு

ரோந்து காவலர்களுக்கும் சிறந்த தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கும் மாதாந்திர கூட்ட ஆய்வுக் கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கூறினார். 

ரோந்து முறை அறிமுக விழா

ராணிப்பேட்டை மாவட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் காவல்துறையோடு இணைந்து சமூக காவலில் ஈடுபட்டு குற்றங்கள் நிகழாத வண்ணம் பிரத்யேக ரோந்து அமைப்பு, கிராமிய விழிப்புணர்வு குழுக்கள், ரோந்து கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பல ரோந்து முறைகள் நடைமுறையில் உள்ளன. 

இதன்தொடர்ச்சியாக பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் உறவை மேம்படுத்தும் விதமாக ‘சேர்வோம் - எழுவோம்’ என்ற ரோந்து முறை அறிமுக விழா ஆற்காடு அருகே வேப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

 ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தீபா சத்யன் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

குற்ற சம்பவங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைகள் முழுவதும் 55 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். 

இதன் மூலம் அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு குறைந்தது 10 நபர்களை நேரடி தொடர்பு ஏற்படுத்தி கொள்வார்கள். அவர்களின் இருப்பிடம், குடும்ப விவரங்களை அறிந்து கொள்வதோடு அவர்களுக்கு ரோந்து முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடர்பு எண்கள் அடங்கிய துண்டு பிரசுரம் அளித்து அவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள முடியும். 

அந்த பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தகவல்கள், அனைத்து விதமான சமூக பிரச்சினைகள், ஆதரவற்றோர் குறித்த விவரங்கள், இளைஞர்களை பாதிக்கக்கூடிய விஷயங்கள் என அனைத்து விதமான தகவல்களும் உடனுக்குடன் பெற்று குற்றங்கள் நிகழாத வண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்களுக்கு பரிசு

மேலும் இதன்மூலம் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இணக்கமான சூழல் ஏற்படுத்த ஏதுவாக இருக்கும். மேலும் சிறப்பாக செயல்படும் ரோந்து காவலர்களுக்கும், சிறந்த தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கும் மாதாந்திர கூட்ட ஆய்வுக் கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார் 

விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, புகழேந்தி, கணேசன், மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள், ரோந்து போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story