நாமகிரிப்பேட்டை அருகே பெண் துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை


நாமகிரிப்பேட்டை அருகே பெண் துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 Sep 2021 6:24 PM GMT (Updated: 4 Sep 2021 6:24 PM GMT)

நாமகிரிப்பேட்டை அருகே பெண் துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராசிபுரம்:
துப்புரவு பணியாளர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (வயது 45). இவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். செல்வியின் தாயார் பாப்பாத்தி நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூரில் வசித்து வருகிறார்.
பாப்பாத்தி தனது மகள்கள் 4 பேருக்கும் வீட்டுமனையை பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது செல்வி தனது சகோதரிகளுக்கு பணம், நகை கொடுத்துள்ளேன், அதனை திருப்பி கொடுத்தால் வீட்டுமனையை கிரயம் செய்து கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இந்தநிலையில் நேற்று காலை செல்வி, தனது தாயார் ஊரில் உள்ள காளியம்மன் கோவில் அருகே இறந்து கிடந்தார். அவருடைய உடல் அருகே விஷ பாட்டில் ஒன்றும் கிடந்தது. இதையறிந்து அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story