ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 4 Sep 2021 8:35 PM GMT (Updated: 4 Sep 2021 8:35 PM GMT)

ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

அயோத்தியாப்பட்டணம், செப்.5-
சேலம் அருகே டி.பெருமாபாளையம் ஊராட்சியில் காரைக்காடு ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
காரைக்காடு ஏரி நிரம்பியது
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த டி.பெருமாபாளையம் பகுதியில் கல்லாறு, திருமணிமுத்தாறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் டி.பெருமாபாளையம் ஊராட்சியில் உள்ள காரைக்காடு ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நள்ளிரவில் நிரம்பியது. ஏரியில் தண்ணீர் நிரம்பி மழைநீர் டி.பெருமாபாளையம் ஊருக்குள் வெள்ளமாக பெருக்கெடுத்து தெருக்களில் கரைபுரண்டு ஓடியது. 
மேலும் தாழ்வான பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ஏரிநீா் புகுந்தது. இதனால் நள்ளிரவில் மக்கள் தங்குவதற்கு இடமின்றி கடுமையாக அவதிக்குள்ளாகினர். அவர்கள் மழைநீரில் உடைமைகள் அடித்துசெல்லப்பட்ட நிலையில் பக்கத்தில் உள்ள மேடான பகுதிகளில் விடிய, விடிய தூக்கமின்றி பரிதவித்தனர். ஒரு சிலர் அருகில் மேடான பகுதியில் உள்ள வீடுகளில் சென்று தஞ்சம் அடைந்தனர். ஒரு சிலரது வீட்டின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன.
பசு, கோழிகள்
இதனிடையே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 2 பசுக்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் அவர் பண்ணையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளும், 3 ஆடுகளும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன.
மேலும் அந்த பகுதியில் இருந்த பூந்தோட்டம், வெங்காயம், சோளம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்ததால் பயிர்கள் நாசமாகின. வாழை மரங்களும் மழைநீரில் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. 
அதிகாரிகள் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி உதவி இயக்குனர் மணிவாசகம், வருவாய் ஆய்வாளர் அருள்மொழி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட்டனர்.  மேலும் அந்த பகுதியில் வெள்ள சேதத்தை தடுக்கும் வகையில் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. ஏரி நீர் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தெருக்களில்  மண் அரிப்பால் குண்டும், குழியுமாக வீதிகள் காட்சி அளித்தன. 
இதேபோல் தாசநாயக்கன்பட்டி பகுதியிலும் காரைக்காடு ஏரியில் இருந்து வெளியேறிய மழைநீர் 6 வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் அங்குள்ள பெரும்பாலான தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்து காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதி மக்களும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

Related Tags :
Next Story