ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு: சென்னை மாநகருக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்க திட்டம்


ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு: சென்னை மாநகருக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்க திட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2021 3:44 AM GMT (Updated: 6 Sep 2021 3:44 AM GMT)

ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் சென்னை மாநகர பகுதிகளுக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 2 ஆயிரத்து 621 மில்லியன் கன அடி (2.6 டி.எம்.சி.), சோழவரம் ஏரியில் 645 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 880 மில்லியன் கன அடி (2.8 டி.எம்.சி.), செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 652 மில்லியன் கன அடி (2.5 டி.எம்.சி.), கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 477 மில்லியன் கன அடி மற்றும் வீராணம் ஏரியில் 1,392 மில்லியன் கன அடி உள்பட 10 ஆயிரத்து 667 மில்லியன் கன அடி (10.66 டி.எம்.சி.) இருப்பு உள்ளது.

சென்னை மாநகருக்கு மாதம் 1 டி.எம்.சி. குடிநீர் தேவைப்படுகிறது. தற்போதைய இருப்புபடி அடுத்த 10 மாதங்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இதுதவிர வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் ஏரிகளின் நீர்ப்பிடிப்புகள் வாயிலாக ஏரிகளுக்கு கூடுதலாக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

குடிநீர் வினியோகம் அதிகரிப்பு

இதனால் தற்போது சென்னை மாநகருக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக நடப்பாண்டு தொடக்கத்தில் 650 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த அளவு 933 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக குடிநீர் குழாய்கள் மூலம் 735.91 மில்லியன் லிட்டர், விரிவாக்கப்பட்ட மாநகர பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் 127.14 மில்லியன் லிட்டர், லாரிகள் மூலம் 18.51 மில்லியன் லிட்டர், விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகளில் 12.92 மில்லியன் லிட்டர் உள்பட 894.48 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுதவிர தொழிற்சாலைகளுக்கு 16.11 மில்லியன் லிட்டரும், மொத்தமாக வாங்கும் நுகர்வோர்களுக்கு 23.15 மில்லியன் லிட்டர் உள்பட 933.74 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

1,000 மில்லியன் லிட்டர்

தற்போதைய சூழ்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி (13.22 டி.எம்.சி.) ஆகும். ஆனால் தற்போது 10 ஆயிரத்து 667 மில்லியன் கன அடி (10.66 டி.எம்.சி.) அதாவது 80.68 சதவீதம் ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. இந்தநிலையில் வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை முலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க ஏரிகளில் போதுமான இடவசதி இல்லை.

இதனால் சென்னை மாநகருக்கு 1,000 மில்லியன் லிட்டர் வரை கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதுவும் குறிப்பாக லாரிகளில் குடிநீர் வழங்குவதை சற்று குறைத்து கொண்டு குழாய்கள் மூலம் கூடுதலாக வினியோகிக்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story