உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2021 4:44 PM GMT (Updated: 6 Sep 2021 4:44 PM GMT)

சீர்காழி அருகே மர்மமான முறையில் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

சீர்காழி:
சீர்காழி அருகே மர்மமான முறையில் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
மீனவர் மர்மச்சாவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமம் அன்னை தெரசா வீதியை சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய மகன்  முருகன் (வயது 26).மீனவர். இவர் நேற்று முன்தினம் தொடுவாய் மாரியம்மன் கோவில் எதிரே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் முருகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். 
இதுகுறித்து திருமுல்லைவாசல் கிராம நிர்வாக அலுவலர் மோகனகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
உடலை வாங்க மறுத்து போராட்டம்
 இந்த நிலையில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து முருகனின் உடலை  அவரது உறவினர்களிடம், டாக்டர்கள் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் முருகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும்,  சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி முருகனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
பரபரப்பு
பேச்சுவார்த்தையில் முருகனின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால்  முருகனின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்று நேற்று மாலை அடக்கம் செய்தனர். மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story