போலீஸ் என கூறி பெண்ணிடம் நூதனமுறையில் நகைகளை பறித்த 2 ஆசாமிகள்


போலீஸ் என கூறி பெண்ணிடம் நூதனமுறையில் நகைகளை பறித்த 2 ஆசாமிகள்
x
தினத்தந்தி 6 Sep 2021 6:51 PM GMT (Updated: 6 Sep 2021 6:51 PM GMT)

காரைக்குடியில் போலீஸ் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகைகளை பறித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

காரைக்குடி,

காரைக்குடியில் போலீஸ் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகைகளை பறித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் போல நடித்து

காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10-வது வீதியில் வசித்து வருபவர் சசிசவுந்தரம் (வயது 57). இவர் செக்காலை பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்ப்பதற்காக பல்கலைக்கழக சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து, நாங்கள் போலீசார் முக கவசம் அணியாமல் செல்லக்கூடாது. அவசியம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
உடனே சசிசவுந்தரம் தான் வைத்திருந்த முக கவசத்தை அணிந்துள்ளார். பின்னர் அதிகம் சங்கிலி பறிப்பு நடக்கும் நேரத்தில் இப்படி தனியாக சங்கிலி அணிந்து கொண்டு நடந்து செல்கிறீர்கள். திருடர்கள் பார்த்தால் என்னாவது?அதை கழற்றி பையில் வையுங்கள் என்று கூறியுள்ளனர்.

நகை அபேஸ்

உடனே சசிசவுந்தரம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, கைகளில் அணிந்திருந்த 3 பவுன் எடையுள்ள 2 வளையல்கள் ஆகியவற்றை கழற்றி தான் வைத்திருந்த பர்சில் வைத்துள்ளார். உடனே பர்சின் ஜிப்பை நன்றாக மூடுங்கள் என்று கூறியபடி பர்சினை வாங்கி சசிசவுந்தரத்திற்கு தெரியாமலேயே நகைகளை எடுத்துக்கொண்டு பர்சின் ஜிப்பை மூடி கொடுத்துள்ளனர்.
பர்சை வாங்கிக்கொண்டு சிறிது தூரம் சென்ற சசிசவுந்தரம் பர்சின் ஜிப்பை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், போலீஸ் என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.



Next Story