கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Sep 2021 6:12 AM GMT (Updated: 7 Sep 2021 6:12 AM GMT)

தாத்தா சொத்தில் தராத உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் பெண் ஒருவர் நுழைவு வாசல் வழியாக நேற்று வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை பரிசோதனை செய்ய முயன்றனர். உடனே போலீசாரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண், தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைக் கண்டு பதறிப்போன அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் விரைந்து சென்று அவரது கையில் வைத்திருந்த டீசல் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர். மேலும் பதற்றத்தில் அதிகளவு மூச்சு திணறல் ஏற்பட்டு அந்த பெண் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தாத்தா சொத்தில் பங்கு

இதையடுத்து அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்திய போலீசார் போலீஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பட்டமந்திரி பகுதியில் வசித்து வரும் சோபனா (வயது 36) என்பதும், கணவரால் கைவிடப்பட்ட அவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில் அதே பகுதியில் அவரது தாத்தாவிற்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தில் பங்கு தராமல் அவரது உறவினர்கள் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது தாத்தாவின் சொத்தில் பங்கு தராததை கண்டித்து உறவினர்கள் மீது சோபனா மீஞ்சூர் போலீஸ் நிலையம் ஆர்.டி.ஓ, தாசில்தார் என அனைவரிடத்திலும் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

போலீசார் எச்சரிக்கை

இந்த புகாரின் பேரில், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த அவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குள்ளிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் சோபனாவிற்கு அறிவுரை கூறியதுடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தாத்தா சொத்தில் உறவினர்கள் பங்கு கொடுக்காத விரக்தியில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story