சிறுமியிடம் பாலியல் சீண்டல்: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியிடம் பாலியல் சீண்டல்: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Sep 2021 7:27 PM GMT (Updated: 7 Sep 2021 7:27 PM GMT)

சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை:
பாலியல் சீண்டல்
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் அருகே அரிசிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 39). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி கடைக்கு சென்ற 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்தார். 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
சிறை தண்டனை
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சசிக்குமாருக்கு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார். 
அதன்படி அவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் பெண் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிக்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர்.

Next Story